Latest Movie :

Wednesday, 12 October 2011

திருப்பருப்பதம் - (ஸ்ரீசைலம்)


தல வரலாறு

  • வட நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது முதலாவது தலமாகும்.
  • மக்கள் வழக்கில் தற்போது "ஸ்ரீசைலம்" என்று வழங்குகிறது.
  • சந்திரவதி என்னும் பெண் அடியவர், மல்லிகை மலர்களைக் கொண்டு இப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டதால் இத்தலத்து இறைவன் மல்லிகார்ச்சுனர் என்று பெயர் பெற்றார்.
  • சிலாத முனிவர் தவஞ்செய்த தலமாதலின் இஃது ஸ்ரீசைலம் எனப்படுகிறது.
  • நந்தியம்பெருமான் இத்தலத்தில் தவஞ்செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றலைப் பெற்றார் என்றும்; நந்தியே இங்கு மலையாக இருந்து பெருமானைத் தாங்குகிறார் என்றும் தலபுராணம் கூறுகிறது.

சிறப்புக்கள்

  • பன்னிரண்டு "ஜோதிர்லிங்கங்களுள்" இத்தலமும் ஒன்று. பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களாவன 1. "சோமநாதம்" - குஜராத்திலும், 2. வைத்தியநாதம், 3. பீமசங்கரம், 4. நாகேசம், 5. த்ரயம்பகம், 6. குஸ்மேசம் முறையே - மகாராஷ்டிரத்திலும், 7. ஸ்ரீசைலம் - ஆந்திராவிலும், 8. ஓங்காரம், 9. உஜ்ஜையினி முறையே - மத்தியப் பிரதேசத்திலும், 10, விச்வேசம் (வாரணாசி), 11. கேதாரம் முறையே - உத்திரப் பிரதேசத்திலும், 12. இராமேசுவரம் - தமிழ்நாட்டிலும் உள்ளன.
  • சக்தி பீடத்தில் இத்தலம் பிரமராம்பாள் பீடமாகப் போற்றப்படுகிறது.
  • சம்பந்தரும், சுந்தரரும் திருக்காளத்தியை வணங்கிய பின்னர், அங்கிருந்தே வடக்கு நோக்கித்தொழுது பாடிப் பரவினர். அப்பர் பெருமான் தம்முடைய கயிலையாத்திரையில் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டுப் பாடியுள்ளார்.
  • சம்பந்தர், அப்பர் திருப்பதிகங்களில் இத்தலம் "திருப்பருப்பதம்" என்றும், சுந்தரர் திருப்பதிகத்தில் "சீபர்ப்பதம்" என்றும் குறிக்கப்படுகிறது.
  • தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள மூன்று ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம் மற்றும் திருக்கேதாரம் ஆகும்.
  • இத்தலம் அர்ஜுனத் தலமாகும். மருதமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் மூன்று; அவை அர்ஜுனத் தலங்கள் எனப்படுகிறது. இத்தலம் அவற்றுள் மல்லிகார்ஜுனம் எனப்படும். ஏனையவை (1) திருவிடைமருதூர் - மத்தியார்ஜுனம், (2) திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள திருப்புடைமருதூர் - புடார்ச்சுனம் என்பனவாகும்.
  • மேதி, ரவி, ஜுவி என்னும் மூன்று மரங்களின் சேர்க்கையே (மற்றொரு தலமரமான) திரிபலா மரம் என்பர். தத்தாத்ரேயர் இம்மரத்தினடியில் தவஞ்செய்ததால் இஃது தத்தாத்ரேய விருக்ஷம் என்றும் சொல்லப்படுகிறது. இம்மரம் விருத்த மல்லிகார்ஜுனர் கோயிலில் உள்ளது. [இங்கு கரவீரம் என்னும் பழமையான மரமும் உள்ளது.]
  • கோயில் அமைந்துள்ள இம்மலையடிவாரத்தில் கிருஷ்ணா நதி ஓடுகிறது; இந்நதியைப் பாதாள கங்கை என்று கூறுகின்றனர்.
  • இத்தலத்திற்கு அருகில் நந்திமலை, நந்தியால் உள்ளன. இம்மலைப்பகுதியை "பூகயிலாயம்" என்று புகழ்வர் வீரசைவர்கள்.
  • இம்மலையில் எட்டு சிகரங்களும், ஒன்பது நந்திகளும் உள்ளன. அவை முறையே, சிகரங்களாவன - 1. வைடூரிய சிகரம், 2. பரவாளி சிகரம், 3. ரெளப்ய சிகரம், 4. மாணிக்கச் சிகரம், 5. மரகத சிகரம், 6. பிரம்ம சிகரம், 7. க்ஷேமா சிகரம், 8. வஜ்ர சிகரங்கள் ஆகும்; நந்திகளாவன - 1. பிரதம நந்தி, 2. நாக நந்தி, 3. விநாயக நந்தி, 4. கருட நந்தி, 5. சிவ நந்தி, 6. மகா நந்தி, 7. சூரிய நந்தி, 8. விஷ்ணு நந்தி, 9. சோம நந்தி என்பனவாகும். அவ்வாறே இங்கு 1. பிரமேஸ்வரம், 2. ஜனார்த்தனேஸ்வரம், 3. வருணேஸ்வரம், 4. ஹேமேஸ்வரம், 5. சப்தகோடீஸ்வரம், 6. மோக்ஷேஸ்வரம், 7. இந்திரேஸ்வரம், 8. அக்னேஸ்வரம், 9. குக்குடேஸ்வரம் என்று ஒன்பது கோயில்களும் உள்ளன.
  • இக்கோயிலில் பாண்டவர்கள் கட்டியதாக சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் மேற்குப் பிரகாரத்தில் உள்ளன.
  • இங்கு சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், அன்னபூரணி கோயில், பஞ்சநதீஸ்வரர் கோயில், பளிங்குக் கல்லாலான சண்முகர் ஆலயம் ஆகியன தரிசிக்கத்தக்கன.
  • ஜோதிர்லிங்கத் தலமான இத்தலத்தில் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  • இங்குள்ள கல்வெட்டுக்களால், அன்னதானத்திற்குக் கட்டளைகள் அமைத்தது, கோயிலில் திருப்பணிகள் செய்தது, தீர்த்தக்குளம் வெட்டியது, கோயில் பணியாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது முதலான பல செய்திகளை அறிய முடிகிறது.
  • இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் விஜயநகர மன்னர்கள், சாளுவகாகதீய மன்னர்கள் காலத்தியவை என்று சொல்லப்படுகிறது.

அமைவிடம்

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. way2temple - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger